11.016 போற்றித் திருக்கலி வெண்பா ( ) |
Back to Top
நக்கீரதேவ நாயனார் போற்றித் திருக்கலி வெண்பா
11.016  
போற்றித் திருக்கலி வெண்பா
பண் - (திருத்தலம் ; அருள்தரு உடனுறை அருள்மிகு திருவடிகள் போற்றி )
திருத்தங்கு மார்பின் திருமால் வரைபோல் எருத்தத் திலங்கியவெண் கோட்டுப் பருத்த
| [1] |
குறுத்தாள் நெடுமூக்கிற் குன்றிக்கண் நீல நிறத்தாற் பொலிந்து நிலம்ஏழ் உறத்தாழ்ந்து
| [2] |
பன்றித் திருவுருவாய்க் காணாத பாதங்கள் நின்றவா நின்ற நிலைபோற்றி அன்றியும்
| [3] |
புண்டரிகத் துள்ளிருந்த புத்தேள் கழுகுருவாய் அண்டரண்டம் ஊடுருவ ஆங்கோடிப் பண்டொருநாள்
| [4] |
காணான் இழியக் கனக முடிகவித்துக் கோணாது நின்ற குறிபோற்றி நாணாளும்
| [5] |
பேணிக்கா லங்கள் பிரியாமைப் பூசித்த மாணிக்கா அன்று மதிற்கடவூர்க் காண
| [6] |
வரத்திற் பெரிய வலிதொலையக் காலன் உரத்தில் உதைத்தவுதை போற்றி கரத்தான்மே
| [7] |
வெற்பன் மடப்பாவை கொங்கைமேற் குங்குமத்தின் கற்பழியும் வண்ணங் கசிவிப்பான் பொற்புடைய
| [8] |
வாமன் மகனாய் மலர்க்கணையொன் றோட்டியஅக் காமன் அழகழித்த கண்போற்றி தூமப்
| [9] |
படமெடுத்த வாளரவம் பார்த்தடரப் பற்றி விடமெடுத்த வேகத்தான் மிக்குச் சடலம்
| [10] |
முடங்க வலிக்கும் முயலகன்தன் மொய்ம்பை அடங்க மிதித்தவடர் போற்றி நடுங்கத்
| [11] |
திருமால் முதலாய தேவா சுரர்கள் கருமால் கடல்நாகம் பற்றிக் குருமாற
| [12] |
நீலமுண்ட நீள்முகில்போல் நெஞ்சழல வந்தெழுந்த ஆலமுண்ட கண்டம் அதுபோற்றி சாலமண்டிப்
| [13] |
போருகந்த வானவர்கள் புக்கொடுங்க மிக்கடர்க்கும் தாருகன்தன் மார்பில் தனிச்சூலம் வீரம்
| [14] |
கொடுத்தெறியும் மாகாளி கோபந் தவிர எடுத்த நடத்தியல்பு போற்றி தடுத்து
| [15] |
வரையெடுத்த வாளரக்கன் வாயா றுதிரம் நிரையெடுத்து நெக்குடலம் இற்றுப் புரையெடுத்த
| [16] |
பத்தனைய பொன்முடியும் தோளிருப தும்நெரிய மெத்தெனவே வைத்த விரல்போற்றி அத்தகைத்த
| [17] |
வானவர்கள் தாம்கூடி மந்திரித்த மந்திரத்தை மேனவில ஒடி விதிர்விதிர்த்துத் தானவருக்
| [18] |
கொட்டிக் குறளை உரைத்த அயன்சிரத்தை வெட்டிச் சிரித்த விறல்போற்றி மட்டித்து
| [19] |
வாலுகத்தால் மாவிலங்க மாவகுத்து மற்றதன்மேல் பாலுகுப்பக் கண்டு பதைத்தோடி மேலுதைத்தங்
| [20] |
கொட்டியவன் தாதை இருதாள் எறிந்துயிரை வீட்டிய சண்டிக்கு வேறாக நாட்டின்கண்
| [21] |
பொற்கோயில் உள்ளிருத்திப் பூமாலை போனகமும் நற்கோலம் ஈந்த நலம்போற்றி நிற்க
| [22] |
வலந்தருமால் நான்முகனும் வானவரும் கூடி அலந்தருமால் கொள்ள அடர்க்கும் சலந்தரனைச்
| [23] |
சக்கரத்தால் ஈர்ந் தரிதன் தாமரைக்கண் சாத்துதலும் மிக்கஃதன் றீந்த விறல்போற்றி அக்கணமே
| [24] |
நக்கிருந்த நாமகளை மூக்கரிந்து நால்வேதம் தொக்கிருந்த வண்ணம் துதிசெய்ய மிக்கிருந்த
| [25] |
அங்கைத் தலத்தே அணிமாலை ஆங்களித்த செங்கைத் திறத்த திறல்போற்றி திங்களைத்
| [26] |
தேய்த்ததுவே செம்பொற் செழுஞ்சடைமேற் சேர்வித்து வாய்த்திமையோர் தம்மைஎல்லாம் வான்சிறையில் பாய்த்திப்
| [27] |
பிரமன் குறையிரப்பப் பின்னும் அவற்கு வரமன் றளித்தவலி போற்றி புரமெரித்த
| [28] |
அன்றுய்ந்த மூவர்க் கமர்ந்து வரமளித்து நின்றுய்ந்த வண்ணம் நிகழ்வித்து நன்று
| [29] |
நடைகாவல் மிக்க அருள்கொடுத்துக் கோயில் கடைகாவல் கொண்டவா போற்றி விடைகாவல்
| [30] |
தானவர்கட் காற்றாது தன்னடைந்த நன்மைவிறல் வானவர்கள் வேண்ட மயிலூரும் கோனவனைச்
| [31] |
சேனா பதியாகச் செம்பொன் முடிகவித்து வானாள வைத்த வரம்போற்றி மேனாள்
| [32] |
அதிர்த்தெழுந்த அந்தகனை அண்டரண்டம் உய்யக் கொதித்தெழுந்த சூலத்தாற் கோத்துத் துதித்தங்
| [33] |
கவனிருக்கும் வண்ணம் அருள்கொடுத்தங் கேழேழ் பவமறுத்த பாவனைகள் போற்றி கவைமுகத்த
| [34] |
பொற்பா கரைப்பிறந்து கூறிரண்டாப் போகட்டு மெற்பா சறைப்போக மேல்விலகி நிற்பால
| [35] |
மும்மதத்து வெண்கோட்டுக் கார்நிறத்துப் பைந்தறுகண் வெம்மதத்த வேகத்தால் மிக்கோடி விம்மி
| [36] |
அடர்த்திரைத்துப் பாயும் அடுகளிற்றைப் போக எடுத்துரித்துப் போர்த்தவிசை போற்றி தொடுத்தமைத்த
| [37] |
நாள்மாலை கொண்டணிந்த நால்வர்க்கன் றால்நிழற்கீழ் வாள்மாலை ஆகும் வகையருளித் தோள்மாலை
| [38] |
விட்டிலங்கத் தக்கிணமே நோக்கி வியந்தகுணம் எட்டிலங்க வைத்த இறைபோற்றி ஒட்டி
| [39] |
விசையன் விசையளப்பான் வேடுருவம் ஆகி அசையா உடல்திரியா நின்று வசையினால்
| [40] |
பேசுபதப் பான பிழைபொறுத்து மற்றவற்குப் பாசுபதம் ஈந்த பதம்போற்றி நேசத்தால்
| [41] |
வாயில்நீர் கொண்டு மகுடத் துமிழ்ந் திறைச்சி ஆயசீர்ப் போனகமா அங்கமைத்துக்த் தூயசீர்க்
| [42] |
கண்ணிடந்த கண்ணப்பர் தம்மைமிகக் காதலித்து விண்ணுலகம் ஈந்த விறல்போற்றி மண்ணின்மேல்
| [43] |
காளத்தி போற்றி கயிலைமலை போற்றி யென நீளத்தினால் நினைந்து நிற்பார்கள் தாளத்தோ
| [44] |
டெத்திசையும் பன்முரசம் ஆர்த்திமையோர் போற்றிசைப்ப அத்தனடி சேர்வார்கள் ஆங்கு. | [45] |